​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 13 November 2017

சித்தன் அருள் - 733 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 2


பெருமாள் "எனக்காக நீ மட்டும் தான் ஓடப்போகிறாய்" என்று சொன்ன பொழுது "இந்த வேலையாவது கொடுத்தாரே" என்று சந்தோஷம் அடைந்தாலும், ஓடத்தொடங்கிய பின்தான் ஏற்பாடுகளை செய்வதின் சிரமம் புரிந்தது. அவர் சொன்னது போலவே, என் நண்பர்கள் பட்டாளம் காணாமல் போய்விட்டது, அல்லது ஏதேனும் ஒரு தகவல் கொடுத்து விசாரிக்கச் சொன்னால், பதிலே வரவில்லை. அனைவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய கவனம், நேரம் செலுத்த வேண்டி வந்துவிட்டது.

"சரிதான்! பெருமாள் நம்மை போட்டு பார்க்காத் தீர்மானித்துவிட்டார். இனி யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை" என்று தீர்மானித்து, ஒரு பட்டியலை தீர்மானித்தேன். அந்தநாளுக்குத் தேவையானதை, ஆறு பகுதிகளாக பிரித்தேன்.

முதலில் கோவில் நிர்வாகம், அர்ச்சகரிடம் சில விஷயங்களை பேசி ஒப்புதல் வாங்கினேன்.

இரண்டாவதாக, அன்றைய தினம் பிரசாத விநியோகம் செய்வதற்காக ஒரு பரிஜாதகரை (சமையல் செய்து தயார் பண்ணுபவரை) தொடர்பு கொண்டு, அன்றைய தினம் அவர் கோவிலுக்கு வந்து செய்து தருவதற்கு ஏற்பாடு செய்தேன்.

மூன்றாவதாக அனைத்து தெய்வ மூர்த்தங்களுக்கும் வஸ்திரம்.

நான்காவதாக, அன்றைய தினம் பெருமாளுக்கும், தாயாருக்கும், கருடாழ்வாருக்கும் பூ மாலை.

ஐந்தாவதாக ஷேத்ரபாலகரான சிவபெருமானுக்கு வஸ்திரம், பூமாலை, பூஜை சாதனங்கள்.

ஆறாவதாக தாமிரபரணி தேவிக்கு பூசை செய்து சீர் கொடுப்பது.

கடைசியாக ஒன்றை அடியேன் தீர்மானித்தேன்.

"அகத்தியப் பெருமான், லோபாமுத்திரை தம்பதிகளை அன்றைய தினம் கோடகநல்லூர் வந்திருந்து அபிஷேக பூசையை சிறப்பாக நடத்திக் கொடுத்து, அனைவரையும் அருளச் செய்ய வேண்டும்" என அழைப்பதை தவிர, எந்த ஒருவரையும், தனிப்பட்ட முறையில், அங்கு வாருங்கள் என அழைக்கப்போவதில்லை" என தீர்மானித்தேன். யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களை பெருமாளும், அகத்தியயரும் வரவழைப்பார்கள். பிறருக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே அருள் சென்று சேரட்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

நான்காவது புரட்டாசி சனிக்கிழமைக்கு சென்ற பொழுது, ஓடி ஓடி, உடல் தளர்ந்துவிட்டது. அன்று, பெருமாளை பார்த்த பொழுது எதுவுமே, கேட்கத் தோன்றவில்லை. அமைதியாக, தனிமையில், த்யானத்தில் அவர் முன் அமர்ந்திருந்தேன். அர்ச்சகர், அபிஷேகம் நடந்த மண்டபத்தில் கருட வாகனத்தில் பெருமாளின் உற்சவ மூர்த்தியை வைத்து அலங்கரித்துக் கொண்டிருந்தார்.

"எல்லா ஏற்பாட்டையும் பார்த்து பார்த்து செய்த நீ, என் அபிமான அகத்தியனை அழைக்க மறந்துவிட்டாயே. பாதகமில்லை. வரும் வியாழன் அன்று அவன் குடியிருக்கும் கோயில் சென்று பெருமாளே அழைக்கிறார் என்று வரச் சொல். வருவார்!" என்று நான் மறந்து போனதை பெருமாள் அன்று எடுத்துக் கொடுத்தார்.

இரு வியாழனன்று அகத்தியர் தரிசனத்துக்கு சென்றிருக்கிறேன். அதெப்படி, அவரிடம் வேண்டிக்கொள்ள, அழைக்க மறந்து போனது? கவனக்குறைவோ, அல்லது ஞாபகம் இல்லாமல் போனதோ, என்று என்னை நானே நொந்து கொண்டேன். செய்துவிட்ட தவறுக்கு பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, அந்த வாரம் வியாழக்கிழமை, அன்று எதுவாகினும் சரி, அகத்திய பெருமானிடம் சென்று பெருமாளின் உத்தரவை சமர்ப்பிக்க வேண்டியது தான், என்று தீர்மானித்தேன்.

மனிதனாக நம் இறைவனுக்கு என்னதான் செய்தாலும், குருவருள் இருந்தால் தான் நிறைவு பெரும். அதுவும் அகத்தியர் குருவாக நம்முடன் இருந்தால், நம்மை வழி நடித்திக் கொண்டிருந்தால், நாம் எதை பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை.

அந்த வாரம் வியாழக்கிழமை அகத்தியர் கோவிலுக்கு சென்று அவரிடம் விண்ணப்பித்தேன். செய்த தவறு உள்ளேயே இருந்து உறுத்திக் கொண்டிருந்ததால், மிக கவனமாக வார்த்தைகளை சேகரித்து, அவர் முன் நின்று மனதால் சமர்ப்பித்தேன்.

"ஐயனே! அடியேன் செய்த தவறை மன்னித்து பொருத்தருளுக. பெருமாள் விரட்டிய விரட்டில், உடலால் சோர்ந்து போய்விட்டேன். போனமுறை சனிக்கிழமை அன்று கோடகநல்லூரில், பெருமாள் உத்தரவிட்டார். உங்கள் அருகாமை வேண்டுமாம். உங்களை அழைக்கச் சொன்னார். நீங்கள் வந்திருந்து அன்றைய அபிஷேக பூசைகளை நடத்திக் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் அனைவரையும் வாழ்த்தி, ஆசிர்வதித்து, அவர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுங்கள்" என விண்ணப்பத்தை சமர்ப்பித்து விட்டு அமைதியாக நின்றேன்.

சற்று நேர அமைதி. ஒரு வினாடிக்குள், அந்த அமைதியை விலக்கிக்கொண்டு, அகத்தியப் பெருமானின் சன்னதிக்குள் இருந்து புறப்பட்ட காற்று ஒன்று, படியிறங்கி அடியேனை தழுவி சென்றது. நல்ல நறுமணம். என்னவென்று கண்டுபிடிக்க முடியாத மணம்.

கூடவே "யாம் வருவோம்" என்ற வார்த்தைகள், என் வலது காதில் சன்னமாக ஒலித்தது.

நடந்ததை என்னாலேயே நம்ப முடியவில்லை. உடல் சிலிர்த்து, உறைந்து நின்றேன்.

சித்தன் அருள்........... தொடரும்!

10 comments:

  1. ஒம் லோபமுத்ரா சமேத அகத்தீசாய நமக!

    ReplyDelete
  2. ayya arputham.thodarattam intha arpanippu.agasthiyar thiruvadi
    sharanam.

    ReplyDelete
  3. Sir
    You are blessed and we are getting blessings from god because of your kind heart. Thanks .

    ReplyDelete
  4. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  5. om sri Lobamudrasametha agatheesaya namah....

    ReplyDelete
  6. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  7. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

    ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

    ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி

    ஐயா, தெய்வத்தின் அருளை என்னவென்று சொல்வது... எல்லாம் இறைவன் செயல்

    ReplyDelete
  8. இனிமை! இனிமை! இந்த நாள் ஓர் வரப்பிரசாதம்!ஆயிரம் கோடி நன்றிகள்! ஓம் அகத்திசாய நமஹ. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete